இரண்டாம் நிலை கட்டுரை

பண்பாடு

பண்பாடு என்பது ஓர் இனத்தின் வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றைக் குறிக்கும்.

பண்பாடு எனும் சொல் ’’பண்படு’’ என்ற சொல்லிலிருந்து தோன்றியது. பயிர் செய்வதற்கு ஏற்றவாறு செம்மைப் படுத்தப்பட்ட நிலம் பண்படுத்தப்பட்ட நிலமாகும். அதே போன்று பண்பு நலனில் முதிர்ச்சி பெற்ற மக்களைப் பண்பட்ட மக்கள் என்போம்.

நாகரிகம் பண்பாட்டின் உயர்வைக் காட்டும் கூறு. பண்பாடு என்பது பெரிதும் மாறாத் தன்மையுடையது. ஆயினும், கால ஓட்டத்தில் சிறிய மாற்றங்களுக்கு உட்படலாம்.

தொன்மைக் காலத்திலிருந்தே தமிழர் தம் பண்பாட்டைப் பேணி வாழ்கின்றனர்.

தமிழ் இலக்கியங்கள் தமிழர் பண்பாட்டை அறியப் பயன்படுகின்றன. இசை, ஆடல், நாடகம், சிற்பம், ஓவியம் ஆகிய நுண்கலைகளும் தமிழர் பண்பாட்டைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. இதற்குச் சான்றுகளாகத் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்கள், கோபுரங்கள், செதுக்கிய சிலைகள், புகழ் பெற்ற ஓவியங்கள் என்பன உள்ளன.

தம்மை நாடி வந்தோரை வரவேற்று விருந்தோம்புதல், ஒருவரை ஒருவர் காணும்போது வணக்கம் கூறல், நலம் கேட்டல், முதியோரைப் பேணல் போன்றன தமிழர் பண்பாட்டினுள் அடங்கும். மானம், வீரம், கொடை என்பன தமிழரின் தனித்தன்மையான பண்பாட்டு அடையாளங்கள்.

இந்தியா, ஈழம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ரீயூனியன், தென்னாபிரிக்கா, மொரிசியசு, சீசெல்சு, பிஜி, கயானா, மியான்மர், ஐரோப்பா, அவுத்திரேலியா, கனடா, அமெரிக்கா உட்பட தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் அனைத்திலும் தமிழர் பண்பாடு வேரூன்றி உள்ளது.

புலம்பெயர் தமிழர் தமது பண்பாட்டையும் மொழியையும் கலைகளையும் தாயகப் பிணைப்பின் ஊடாகப் பேணி வருகின்றனர்.