பாடல் கட்டுரை

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம்
எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைச்
தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை
பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

இச்சைகொண்டே பொருளெலாம்
இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர்
கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
நச்சைவாயிலே கொணர்ந்து
நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

பச்சையூ னியைந்த வேற்
படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து
வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

 

ஆசிரியர் : மகாகவி பாரதியார்